செய்திகள்

புள்ளம்பாடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் விவசாயி பலி

Published On 2018-10-28 16:21 GMT   |   Update On 2018-10-28 16:21 GMT
புள்ளம்பாடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் விவசாயி பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கல்லக்குடி:

அரியலூர் மாவட்டம் செம்பியகுடி கிராமத்தை சேர்ந்தவர் மருதை மகன் ராஜாசிதம்பரம்(வயது36) விவசாயி. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை விஷயமாக திருச்சிக்கு வந்தார். பின்னர் ஊருக்கு திரும்பினார். அப்போது திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் கோவண்டாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் பிரபு(27) மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த ஜார்ஜ் மகன் ஆரோக்கியராஜ்(27) ஆகிய இருவரும் கோவண்டாகுறிச்சி கிராமத்தில் இருந்து புள்ளம்பாடி நோக்கி எதிரே மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களும் வேகமாக வந்து எதிர்பாராதவிதமாக மோதியதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.

இதில் ராஜா சிதம்பரத்தை அந்த வழியாக சென்ற காரில் ஏற்றி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பலத்த காயமடைந்த பிரபு லால்குடி அரசுமருத்துவமனையிலும்,ஆரோக்கியராஜ் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ராஜாசிதம்பரம் உறவினர் பாஸ்கர் கொடுத்த புகாரின்பேரில் கல்லக்குடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துகுமார், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ஆகியோர் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராஜாசிதம்பரத்திற்கு தேவி என்ற மனைவியும், 3 வயது மற்றும் 8 மாதம் ஆன 2 பெண் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News