செய்திகள்

நலிவுற்ற அ.தி.மு.க. தொழிலாளர்கள் 106 பேருக்கு தலா ரூ.1 லட்சம்- எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். வழங்கினர்

Published On 2018-10-23 10:17 GMT   |   Update On 2018-10-23 10:17 GMT
அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று 106 தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் உதவிகள் வழங்கினார்கள்.
சென்னை:

அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் நலிவுற்ற தொழிலாளர்களுக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று 106 தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் உதவிகள் வழங்கினார்கள்.

அண்ணா தொழிற்சங்கங்களில் இருந்தும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 106 நலிந்த தொழிலாளர்களுக்கு இந்த நிதி வழங்கப்பட்டது. மொத்தம் ரூ.1 கோடியே 6 லட்சம் குடும்ப நல நிதி உதவியாக வழங்கப்பட்டது.

கட்சிப்பணியின்போது மரணம் அடைந்த 3 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.6 லட்சமும் சாலை விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் 2 பேர் மருத்துவ சிகிச்சைக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் உதவி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், பாண்டியராஜன், துரைக்கண்ணு மற்றும் கமலக்கண்ணன், எஸ்.கே.டி. ஜக்கையன், கொறடா ராஜேந்திரன், செம்மலை, வாலாஜாபாத் கணேசன், தி.நகர் சத்யா, மின்சார சத்தியநாராயண மூர்த்தி உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
Tags:    

Similar News