செய்திகள்
காவேரிப்பட்டணம் அருகே விபத்து- தேங்காய் வியாபாரி பலி
காவேரிப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் தேங்காய் வியாபாரி பலியானார்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த போத்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் (வயது 45) தேங்காய் வியாபாரி. இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் காவேரிப்பட்டணம்- தருமபுரி சாலையில் நரிமேடு பிரிவு ரோடு அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த வேன் எதிர்பாராத விதமாக அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மணிவேல் இறந்தார். விபத்தில் இறந்த மணிவேலுக்கு பூங்கொடி (37) என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.
இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ் பெக்டர் காயத்திரி ஆகியோர் வழக்குபதிவு செய்து வேனை ஓட்டி வந்த தருமபுரி மாவட்டம், தொட்டலாம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.