செய்திகள்

சரக்கு வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி

Published On 2018-10-20 16:59 GMT   |   Update On 2018-10-20 16:59 GMT
சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் தருண் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ராமேசுவரம்:

கீழக்கரை சிவகாமிபுரத்தில் குடியிருந்து வருபவர் காந்தி. இவருடைய மகன் தருண்(வயது18). இதே பகுதியில் குடியிருப்பவர் பாஸ்கரன் மகன் முனீசுவரன்(21). இவர்கள் இருவரும் தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். இந்நிலையில் முனீசுவரனின் அக்கா ராமேசுவரம் நடராஜபுரத்தில் வசித்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக முனீசுவரன், தருண் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் ராமேசுவரம் வந்தனர். பின்னர் இந்த பகுதியில் சுற்றிப்பார்த்து விட்டு கீழக்கரைக்கு திரும்பினர்.

இவர்கள் செம்மமடம் சுங்கச்சாவடி அருகே சென்றபோது தங்கச்சிமடத்தில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்த சரக்கு வாகனம் இவர்களது மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தருண் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்த முனீசுவரன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவல் அறிந்ததும் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

பின்பு இறந்த தருணின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து சிக்கலை சேர்ந்த வேன் டிரைவர் மயில்வாகனனை கைது செய்தனர். 
Tags:    

Similar News