செய்திகள்

விருதுநகர் பைபாஸ் ரோட்டில் விபத்து: நூல் வியாபாரி மகளுடன் உடல் நசுங்கி பலி

Published On 2018-10-19 04:50 GMT   |   Update On 2018-10-19 04:53 GMT
நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் நூல் வியாபாரி மற்றும் அவரது மகள் உடல் நசுங்கி பலியானார்கள். 5 பேர் படுகாயம் அடைந்தனர். #accident

விருதுநகர்:

திருப்பூரைச் சேர்ந்தவர் பாலுச்சாமி (வயது 70). நூல் வியாபாரியான இவர், விடுமுறையை முன்னிட்டு குடும்பத்துடன் திருச்செந்தூர் செல்ல திட்டமிட்டார்.

அதன்படி நேற்று இரவு பாலுச்சாமி தனது மனைவி சிவகாமி (58), மகள் கவிதா (40), மகன் ராஜேஷ் (29), உறவினர்கள் சரஸ்வதி (70), சீதாலட்சுமி (40), சுருதி (18) ஆகியோருடன் காரில் திருச்செந்தூருக்கு புறப்பட்டார். காரை திருப்பூரைச் சேர்ந்த சிவக்குமார் ஓட்டினார்.

இன்று அதிகாலை 5 மணிக்கு விருதுநகர் பைபாஸ் ரோட்டில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது ரோட்டோரத்தில் பழுதாகி நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது.

காரில் இருந்த பாலுச்சாமி, அவரது மகள் கவிதா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

விபத்து நடந்த உடனேயே அக்கம், பக்கத்தினர் திரண்டு வந்து காரில் சிக்கியிருந்த சிவகாமி, ராஜேஷ், சரஸ்வதி, சீதாலட்சுமி, சிவக்குமார் ஆகியோரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 5 பேரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் சுருதி மட்டும் காயமின்றி தப்பினார்.

விபத்து குறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை ரோட்டோரத்தில் நிறுத்தியிருந்த டிரைவர் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த அன்புராஜ் (28) என்பவரை கைது செய்தனர். #accident

Tags:    

Similar News