கோவை அருகே என்ஜினீயர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு
கோவை:
கோவையை அடுத்த கோவில்பாளையம் குமரன் நகரை சேர்ந்தவர் பிரவின்குமார். என்ஜினீயர். இவரது மனைவி சரண்யா (வயது 32). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். பிரவின் குமார் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். சம்பவத்தன்று சரண்யா சேரன் மாநகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு மகளுடன் சென்றார். மறுநாள் வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் சரண்யாவிடம் கூறினர்.
உடனே வீட்டுக்கு சென்று பார்த்த போது அங்கிருந்த 20 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. அப்போது 2 இடங்களில் பதிவாகியிருந்த திருடர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். அதன்மூலம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டில் ஆள் இல்லாததை அறிந்தே மர்மநபர்கள் துணிச்சலாக கைவரிசை காட்டி உள்ளனர். எனவே சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.