செய்திகள்

துடியலூர் அருகே வாலிபர் கொலை - உடலை மீட்டு போலீசார் விசாரணை

Published On 2018-10-17 09:31 GMT   |   Update On 2018-10-17 09:31 GMT
துடியலூர் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம்:

கோவை துடியலூர் கணுவாய்- தாளியூர் ரோட்டில் உள்ள தடுப்பணை அருகே இன்று காலை சுமார் 35 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கொலை செய்யப்பட்டவர் யார்? என்பது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் கொலை செய்யப்பட்டவர் யார்? என்பது தெரியவில்லை. அவர் பார்ப்பதற்கு வட மாநிலத்தை சேர்ந்தவர் போல உள்ளார். அவரை யாரோ மர்ம நபர்கள் கழுத்தில் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

பின்னர் போலீசார் கொலை செய்யப்பட்டவரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த பகுதியில் செங்கல் சூளைகள் உள்ளது. இங்கு வேலை பார்ப்பவராக அவர் இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறனர்.

Tags:    

Similar News