மோட்டார் சைக்கிள் விபத்தில் பாண்லே ஊழியர் பலி
புதுச்சேரி:
புதுவை 45 அடி ரோடு பாலாஜி நகர் வழியாக அதிகாலை ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் ஒரு தனியார் பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் பஸ் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த அந்த வாலிபர் எதிர்பாராத விதமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்சின் பின்புறம் வேகமாக மோதினார்.
இதில் பஸ்சின் அடியில் புகுந்த அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சிறிது நேரத்தில் பலியானார்.
இதையறிந்த வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போக்கு வரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விபத்தில் இறந்தவர் சின்ன கொசப்பாளையம் ராமன் நகரை சேர்ந்த ராஜாராம் என்பவரின் மகன் வெங்கடேசன் (வயது 27) என்பதும், இவர் பாண்லே ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.