செய்திகள்

மெலட்டூர் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

Published On 2018-10-15 15:48 GMT   |   Update On 2018-10-15 15:48 GMT
மெலட்டூர் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
மெலட்டூர்:

தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் சங்கர் (வயது 25). இவரும், அதே ஊரை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரின் மகன் விக்னேஷ் (30) என்பவரும் நேற்று காலை ஒரு மோட்டார் சைக்கிளில் பாபநாசம் அருகே உள்ள பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அங்கு அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு மெலட்டூர் வழியாக தஞ்சாவூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

மெலட்டூர் அருகே நரியனூர் கலைஞர் காலனி பகுதியில் சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சங்கர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த விக்னேஷ் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மெலட்டூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மெலட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News