செய்திகள்

திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு அருகே பிளஸ்-2 மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

Published On 2018-10-15 11:11 GMT   |   Update On 2018-10-15 11:11 GMT
பிளஸ்-2 மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து கடலூர் ஜெயிலில் அடைத்தனர்.

சேதராப்பட்டு:

திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டை அடுத்த பஞ்சவடியை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ்-2 படித்து வந்தார். இவருக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரை புதுவையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர்.

டாக்டர்கள் அவரை பரிசோதித்தனர். இதில் அந்த மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மாணவிக்கு 16 வயது தான் ஆகி இருந்தது. எனவே புதுவை குழந்தைகள் நல கமிட்டிக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விசாரணை நடத்தினார்கள்.

மாணவி விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி தலைவர் லட்சுமிபதிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்.

பின்னர் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை மேற்கொண்டார்.

அந்த மாணவியிடம் விசாரணை நடத்தியபோது தங்கள் பகுதியை சேர்ந்த ராம்கி (வயது 25) என்பவருடன் நெருங்கி பழகியதாகவும் அவர் தன்னை ஏமாற்றி கற்பழித்து விட்டதாகவும் கூறினார்.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ராம்கி கைது செய்யப்பட்டு கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News