செய்திகள்

கோவில்பட்டி-சங்கரன்கோவிலில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம்

Published On 2018-10-05 14:53 GMT   |   Update On 2018-10-05 14:53 GMT
கோவில்பட்டி-சங்கரன்கோவிலில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி:

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு பள்ளிகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் விடுப்பு எடுத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் சுப்பிரமணியன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் சகாயராஜ், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணை தலைவர் முத்துமாரி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்வராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க தலைவர் மைதீன் பட்டாணி, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்க மாவட்ட பொருளாளர் பால்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். ஓய்வூதியர் சங்க நிர்வாகி பாலுச்சாமி ஆர்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.

ஆர்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் இளங்கோகண்ணன், ராஜ், ரத்தினம், மனோகரன், சங்கரநாராயணன், பசுபதி, வெங்கடாச்சலம், தர்மராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் கற்பகம் நிறைவுரை ஆற்றினார். முடிவில் அரசு ஊழியர் சங்க வட்டச்செயலாளர் வேல்ராஜன் நன்றி கூறினார். #tamilnews
Tags:    

Similar News