செய்திகள்

கோத்தகிரி அருகே ஊருக்குள் புகுந்து பேக்கரியை சேதப்படுத்திய கரடி - பொதுமக்கள் பீதி

Published On 2018-10-01 12:19 GMT   |   Update On 2018-10-01 12:19 GMT
கோத்தகிரி அருகே பேக்கரியில் புகுந்து கரடி அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
காந்தல்:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து கொடநாடு செல்லும் சாலையில் எஸ். கைகாட்டி என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள மெயின் ரோட்டில் ஜெகதீஷ் என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார்.

இதன் பின்புறம் இவரது வீடு உள்ளது. நேற்று நள்ளிரவு கரடி ஒன்று பேக்கரியின் முன்பக்க கதவை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தது. சத்தம் கேட்டு ஜெகதீஷ் அங்கு வந்தார். அப்போது கரடி பேக்கரியில் வைக்கப்பட்டு இருந்த ஷோகேசை உடைத்து அதில் வைக்கப்பட்டு இருந்த முறுக்கு, கேக் உள்ளிட்டவைகளை தின்று சேதப்படுத்தி கொண்டு இருந்தது. இதனால் ஜெகதீஷ் அதிர்ச்சி அடைந்தார். அவர் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பொதுமக்கள் தொடர்ந்து கூச்சல் போடவே கரடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வன அலுவலர் சீனிவாசன் மற்றும் ஊழியர்கள் இன்று காலை அங்கு வந்தனர்.

அவர்கள் பேக்கரியில் ஆய்வு செய்த போது கரடி புகுந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அப்பகுதி கிராம மக்கள் கூறும் போது, கடந்த சில நாட்களாகவே இப் பகுதியில் கரடி சுற்றி திரிந்து வருகிறது.

இதனை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். ஊருக்குள் கரடி புகுந்ததால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
Tags:    

Similar News