செய்திகள்

எச்.ராஜா உருவப்பொம்மை எரித்த 5 பேர் மீது வழக்கு

Published On 2018-09-25 11:56 GMT   |   Update On 2018-09-25 11:56 GMT
பெரியார் சிலை அவமதிப்புக்கு பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தூண்டுதலே காரணம் என்று கூறி எச்.ராஜா உருவப்பொம்மையை எரிக்க முயன்றதால் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருவாரூர்:

சென்னை மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த 17-ந்தேதி பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்த சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காவராப்பட்டு கிராமத்தில் பெரியார் சிலையில் நேற்று முன்தினம் மர்ம கும்பல் செருப்பு மாலை அணிவித்து விட்டு தப்பி சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் ஒரத்தநாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளனர். பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்துக்கு தி.மு.க., தி.க., ம.தி.மு.க., மற்றும் அனைத்து கட்சியினர், இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் திருவாரூர் அருகே சோழங்கநல்லூர் பகுதியில் பெரியார் சிலை அவமதிப்புக்கு பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தூண்டுதலே காரணம் என்று கூறி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள் திடீரென எச்.ராஜா உருவப்பொம்மையை தீ வைத்து கொளுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு நேற்று தி.க.வினர் பெரியார் சிலை அவமதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து எச்.ராஜா உருவப்பொம்மையை கொளுத்த முயன்றனர். ஆனால் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து எச்.ராஜா உருவ பொம்மையை கொளுத்த முயன்ற நீடாமங்கலம் தி.க. நகர தலைவர் அமிர்தராஜ் உள்பட 5 பேர் மீது நீடாமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயராணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Tags:    

Similar News