செய்திகள்

தொடரும் தண்ணீர் தட்டுப்பாடு- காலி குடங்களுடன் பெண்கள் திடீர் மறியல்

Published On 2018-09-24 10:51 GMT   |   Update On 2018-09-24 10:51 GMT
திண்டுக்கல் நகரில் தொடரும் தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் இன்றும் காலி குடங்களுடன் மறியல் செய்தனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. போர்வெல்களிலும் தண்ணீர் இல்லாததால் விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.

கோடை காலத்தில் நிலவும் வறட்சியை போன்று தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே தினசரி காலிகுடங்களுடன் மறியல், மாநகராட்சி முற்றுகை போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.

இன்று 13, 14-வது வார்டுகளுக்குட்பட்ட ஒய்.எம்.ஆர். பட்டி, ஜோசப்காலனி பொதுமக்கள் காலி குடங்களுடன் கல்லறை தோட்டம் பகுதியில் அமர்ந்து மறியல் செய்தனர். 3 சாலைகள் சந்திக்கும் பகுதியில் ரோட்டை மறித்து போராட்டம் செய்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவல் அறிந்த நகர் வடக்கு போலீசார் விரைந்து சென்று மறியல் செய்த பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் இங்கு வந்து உறுதி அளித்தால்தான் மறியலை கைவிடுவோம் என தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில் மாநகராட்சி புதியதாக பதித்து உள்ள ஜிக்கா பைப்புகளில் தண்ணீர் வரவில்லை. சோதனை ஓட்டம் என்று கூறி 5 நிமிடம் மட்டுமே தண்ணீர் வருகிறது. எனவே எங்களுக்கு பழைய பைப்புகளிலேயே தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அதன்பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் வந்து மறியல் செய்தவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News