செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் பலி - 3 பேர் காயம்
கிருஷ்ணகிரி அருகே அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றி வந்த ஷேர் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஒருவர் பலியானார். 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை பகுதியில் இருந்து நேற்று முன்தினம் மாலை ஷேர் ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு கிருஷ்ணகிரி பழையபேட்டை மேல்தெரு பகுதியில் வரும் போது ஒரு வளைவில் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது.
இதில் அந்த ஆட்டோவில் பயணம் செய்த மகாராஜகடை அருகே உள்ள ஆட்டுமந்தை பகுதியை சேர்ந்த சின்னதம்பி(49), சாந்தி(38), மங்கம்மாள்(44), மகாலட்சுமி (55) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று சின்னதம்பி இறந்தார்.
இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.