மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
சூலூர்:
சூலூர் கே.கே.சாமி நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன்(48). இவரது மனைவி முத்துலட்சுமி(44). 2 பேரும் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள்.நேற்றிரவு பணி முடிந்து இருவரும் வழக்கம் போல சூலூருக்கு தங்களது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
சூலூர் குமரன் கோட்டம் அருகே வரும்போது பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் வந்த ஹெல்மெட் அணிந்த கொள்ளையன் முத்துலட்சுமியின் கழுத்திலிருந்த 7 பவுன் தாலிச்செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டான். அருகிலிருந்தவர்கள் விரட்டிச் சென்றும் அவனைப் பிடிக்க முடிய வில்லை. அதைத்தொடர்ந்து நாராயணன் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
சூலூர் சிறப்பு உதவி ஆய்வாளர் ரத்தினசாமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தார். தொடந்து செயின் பறிப்பு சம்பவம் சூலூர் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. தாலி செயின் பறிப்பு அதிக அளவில் இரவு பகல் பாராமல் நடந்து வருகிறது. இதனால் வெளியே செல்லவே பெண்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.