திண்டுக்கல் அருகே ரவுடி கொலை - 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை
திண்டுக்கல்:
திண்டுக்கல் பொன்மாந்துறையை சேர்ந்தவர் ரவுடி பாஸ்கர் (வயது36). இவர் நேற்று முன்தினம் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இவர் மீது திண்டுக்கல் காந்திமார்க்கெட் பகுதியை சேர்ந்த ராம்கி என்ற ராமகிருஷ்ணன் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த நிலையில் இந்த கொலை நடந்ததால் அதில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்தனர்.
போலீசார் விசாரணையில் பாஸ்கருக்கும், பொன்மாந்துறையை சேர்ந்த மாசானம் என்பவருக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை நடந்தது தெரிய வந்தது.
இதில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் சின்னபொன்மாந்துறையை சேர்ந்த சரவணன், சண்முகவேல், ஸ்ரீரங்கம் ஆகிய 3 பேர் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
அவர்களை கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே கொலையில் தொடர்புடைய மேலும் 2 பேரை திண்டுக்கல் தாலுகா போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் வேறு யாரேனும் சம்மந்தப்பட்டிருக்கிறார்களா? என்றும் வேறு யாரையேனும் கொலை செய்ய திட்டம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.