செய்திகள்
விபத்தில் அப்பளம்போல் நொறுங்கிய கார்

விக்கிரவாண்டி அருகே பஸ் மீது கார் மோதல்- கல்லூரி மாணவர் பலி

Published On 2018-09-19 06:27 GMT   |   Update On 2018-09-19 06:27 GMT
விக்கிரவாண்டி அருகே இன்று அதிகாலை பஸ் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விக்கிரவாண்டி:

தெலுங்கானா மாநிலம் ஹாஜிப்பூர் பகுதியை சேர்ந்தவர் கட்டம் ராகுல் (வயது 22). இவர் சென்னையில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் அதே கல்லூரியில் படிக்கும் தனது நண்பர்களான தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த விஷ்ணுசோவர்த்தன் ரெட்டி (22), தேவசாய் (23), புத்தி வம்சி (21) உள்பட 5 பேருடன் ராமேஸ்வரத்து சுற்றுலா செல்ல முடிவு செய்தார். அதன்படி நேற்று இரவு ஒரு வாடகை காரில் கட்டம் ராகுல் தனது நண்பர்களுடன் சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு புறப்பட்டார். காரை புத்திவம்தி ஓட்டிவந்தார்.

அந்த கார் இன்று அதிகாலை விக்கிரவாண்டியை அடுத்த ஒரு தனியார் ஓட்டல் அருகே சென்னை-திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது காருக்கு முன்னால் திட்டக்குடி நோக்கி ஒரு அரசு பஸ் சென்றது. திடீரென அந்த பஸ்சின் பின்புறம் கார் மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் கட்டம் ராகுல் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். தேவசாய், புத்திவம்சி உள்பட 5 பேர் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 5 பேரையும் காரில் இருந்து வெளியே மீட்டனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
Tags:    

Similar News