வத்தலக்குண்டு பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
வத்தலக்குண்டு:
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருகிறது. 3 முதல் 6 மணிநேரம் வரை மின்சாரம் நிறுத்தி வைக்கப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
வத்தலக்குண்டு மற்றும் அதன்சுற்றுவட்டார கிராமங்களில் மின்சாரம் திடீரென தடைபட்டு மீண்டும் சில மணிநேரம் கழித்து வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் காலை நேரத்தில் வேலைக்கு செல்வோர், மாணவ-மாணவிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெறுவதால் இரவு நேரத்தில் மின்சாரம் தடைபடும் வேளையில் படிக்க முடியாமல் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தபோது மின்வெட்டுக்கான காரணத்தை தெளிவாக கூறாமல் பராமரிப்பு பணி என மலுப்பி விடுகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் மின்வெட்டு காரணமாக ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் முறையான அறிவிப்பின்றி மின்தடை செய்வதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.