தஞ்சை அருகே எலி மருந்து தடவிய தக்காளியை சாப்பிட்ட வாலிபர் பலி
திருவையாறு:
திருவையாறு அருகே உள்ள எட்டரைவேலி பகுதியைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மகன் சிவநேசன் (வயது 30). கூலி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சிவநேசன் வீட்டில் ஜன்னல் ஓரத்தில் இருந்த தக்காளியை எடுத்து சாப்பிட்டுள்ளார். அதிலிருந்து சிவநேசனுக்கு தொடர்ந்து வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. 2 நாட்கள் கழித்து சிவநேசன் தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அந்த தக்காளி வீட்டில் உள்ள எலியை கொள்ள எலி மருந்து தடவி வைக்கப்பட்டிருந்தது என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து சிவநேசன் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இதுகுறித்து திருவையாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.