செய்திகள்

தண்டராம்பட்டு அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2018-09-12 10:40 GMT   |   Update On 2018-09-12 10:40 GMT
தண்டராம்பட்டு அருகே சிறுமி திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தண்டராம்பட்டு:

தண்டராம்பட்டு அருகே உள்ள நாராயணகுப்பத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், செங்கம் புதுப்பாளையத்தை சேர்ந்த செல்போன் சர்வீஸ் கடை உரிமையாளர் மகேஷ் (24) என்பவருக்கும் இன்று காலை, புதுப்பாளையத்தில் திருமணம் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

நேற்றிரவு மணக்கோலத்தில் சிறுமியை அலங்கரித்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் அழைத்து செல்ல தடபுடலாக ஏற்பாடு செய்தனர். இதுப்பற்றி, கிராம நிர்வாக அலுவலர் சங்கீதாவுக்கு புகார் சென்றது. அவர் வருவாய் ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, வருவாய்த் துறையினர் சிறுமி வீட்டிற்கு விரைந்து சென்று திருமண ஏற்பாடுகளை தடுத்து நிறுத்தினர். ‘‘குழந்தை திருமணம் சட்டப்படி குற்றம், போலீசார் மூலம் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

பின்னர், திருமணத்தை நிறுத்திய அதிகாரிகள் சிறுமியை மீட்டு காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News