ஒரத்தநாடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ. இவரது மகன் ஆண்டனி ரேனோ (வயது 22). இவர் தஞ்சையில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் இறுதியாண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை ஆண்டனி ரேனோ தனது நண்பர் சூர்யாவுடன் (24) பட்டுக்கோட்டை அடுத்த கரம்பியத்தில் இருந்து அம்மாபேட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஒரத்தநாடு புதூர் அருகே உள்ள அம்மமுத்தான் குளக்கரை அருகே வந்த போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த பாஸ்கர் (46) என்பவர் திடீரென மோதினர். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த அடிபட்ட ஆண்டனி ரேனோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் சூர்யா, பாஸ்கர் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து பற்றி ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.