தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்கலாம் - தொழிலாளர் உதவி ஆணையர் அறிவிப்பு
கோவை:
இது தொடர்பாக கோவை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ம.ராஜசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலை கொடுப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு தொழில் நல்லுறவு விருது என்ற திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி நல்ல தொழில் உறவை பேணி பாதுகாக்கும் வேலை கொடுப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017-ம் ஆண்டுக்கான விருதை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட முத்தரப்புக்குழு தேர்வு செய்யும். இந்த விருதுபெற விண்ணப்பிக்கலாம்.
தொழிலாளர் துறையின் www.labour.tn.gov.in என்ற வலைதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது அந்தந்த மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், தொழிலாளர் துணை ஆணையர் (சமரசம்) அலுவலகம், வட்டார தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்கள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனர் அலுவலகங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்பி வைக்க அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந் தேதி கடைசி நாள் ஆகும். விண்ணப்பத்துடன், அதற்கான விண்ணப்ப கட்டணத்தை செலுத்திய விவரத்தை இணைத்து சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.