செய்திகள்

புதுவை தொழில் அதிபரிடம் ரூ.17 லட்சம் மோசடி செய்த வடமாநில தம்பதியர்

Published On 2018-09-08 09:50 GMT   |   Update On 2018-09-08 09:50 GMT
புதுவையில் தொழில் அதிபரிடம் வடமாநில தம்பதியர் ரூ.17 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

வடமாநிலத்தை சேர்ந்தவர் உபேந்திர திருப்பதி. இவர் தனது மனைவி தீபா மற்றும் மாமனார் ஸ்டார் ஆகியோருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுவை கோலாஸ் நகரில் தங்கி புதுவை நகர பகுதிகளில் உள்ள பாருடன் கூடிய 2 ஓட்டல்களை லீசுக்கு எடுத்து நடத்தி வந்தார்.

ஓட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் இந்த ஓட்டல்களை விலைக்கு வாங்கி நடத்துவதாக கூறி வந்தார்.

இந்த நிலையில் புதுவை நெல்லித்தோப்பு அண்ணா நகர் 15-வது குறுக்கு தெருவில் வசித்து வரும் தொழில் அதிபர் சுரபதாஸ் என்பவரிடம் ஓட்டலை விற்று விட்டு சொந்த ஊருக்கு செல்ல போவதாக உபேந்திர திருப்பதி கூறினார்.

இதனை நம்பி ஓட்டலை வாங்க உபேந்திர திருப்பதியிடம் ரூ.17 லட்சத்தை சுரபதாஸ் கொடுத்தார். ஆனால், பணம் வாங்கிய சிலநாட்களில் ஒட்டலை காலி செய்து விட்டு உபேந்திர திருப்பதி குடும்பத்தினருடன் மாயமாகி விட்டார்.

இதையடுத்து சுரபதாஸ் விசாரித்த போதுதான் அந்த ஓட்டல் உபேந்திர திருப்பதிக்கு சொந்தமானது இல்லை என்பது தெரிய வந்தது. இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த சுரபதாஸ் இது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே மோசடி செய்த தலைமறைவான வட மாநில தம்பதியர் சுவிட்சர்லாந்துக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி புதுவை சேர்ந்த பலரிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

சுமார் ரூ.2 கோடிக்கு மேல் பணத்தை சுருட்டி கொண்டு சென்று விட்டதாக தெரிகிறது. அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். மோசடியில் ஈடுபட்ட அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News