செய்திகள்

கூடலூர் அருகே யானை தாக்கி மூதாட்டி பலி

Published On 2018-09-08 04:55 GMT   |   Update On 2018-09-08 04:55 GMT
கூடலூர் அருகே யானை தாக்கி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கூடலூர்:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மனித-விலங்குகள் மோதல் நடந்து வருகிறது.

இதில் யானை தாக்கி பலர் இறந்து விட்டனர். இந்நிலையில் தற்போது பெய்த மழையின் காரணமாக வனப்பகுதிகளில் பசுமை திரும்பியுள்ளது. மேலும் வனத்தையொட்டி உள்ள கிராமங்களிலும் விவசாய பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக கூடலூர் பகுதியில் யானைகள் அடிக்கடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வந்து செல்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கூடலூர் சீபோர்த் என்ற பகுதியை சேர்ந்த சரோஜினி(60) என்ற மூதாட்டி அந்த பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது புதர்மறைவில் இருந்த ஒரு யானை திடீரென துதிக்கையை வெளியே நீட்டி மூதாட்டியை கீழே தள்ளி தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் அலறி துடித்தார்.

சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் யானையை விரட்டினர். தொடர்ந்து படுகாயம் அடைந்த சரோஜினியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரோஜினி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கூடலூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News