செய்திகள்

ஆர்.எஸ்.புரம் அருகே குளத்தில் தொழிலாளி பிணம்

Published On 2018-09-06 16:23 GMT   |   Update On 2018-09-06 16:23 GMT
ஆர்.எஸ்.புரம் அருகே குளத்தில் 35 வயது ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை:

கோவை கிருஷ்ணாம்பதி குளத்தில் ஒரு ஆண் பிணமாக கிடப்பதாக ஆர்.எஸ். புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு குளத்தின் தென் மேற்கு பகுதியில் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் பிணமாக கிடந்தவர் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 35) என்பது தெரியவந்தது. இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. தனியாக வசித்து வந்த இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு என கூறப்படுகிறது. இவரது சைக்கிள் குளத்தின் கரையில் நின்றது. எனவே இவர் குளத்துக்குள் கால் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கருதுகின்றனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் இதே குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இங்கிருந்து சிறிது தூரத்தில் உள்ள செல்வாம்பதி குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் துண்டு, துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டிருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது கூட இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லை. அடுத்தடுத்து குளத்துக்குள் இருந்து உடல்கள் மீட்கப்படும் சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News