தேவதானப்பட்டி அருகே தோட்டத்தில் மோட்டார் திருடிய 2 பேர் கைது
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே காமக்காபட்டியில் நிஜாம் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் இருந்த மின் மோட்டாரை சிலர் திருடிச் சென்றனர். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் வத்தலக்குண்டு பகுதியில் மோட்டாருடன் 2 வாலிபர்கள் சுற்றித் திரிந்துள்ளனர். போலீசார் அவர்களை அழைத்து விசாரித்தபோது முண்ணுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை துருவி துருவி விசாரித்தனர்.
அதில் அவர்கள் மோட்டார் திருடியதை ஒப்புக் கொண்டனர். இது குறித்து தேவதானப்பட்டி போலீசுக்கு வத்தலக்குண்டு போலீசார் தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சாகுல் தலைமையில் அங்கு விரைந்து சென்ற தேவதானப்பட்டி போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் கெங்குவார்பட்டியைச் சேர்ந்த தமிழ்செல்வன், முத்துராஜா என தெரிய வந்தது. மோட்டார் திருடி வத்தலக்குண்டு பகுதியில் விற்பனைக்காக கொண்டு சென்றுள்ளனர். அப்போது வத்தலக்குண்டு போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர்.
வேறு ஏதும் கொள்ளை களில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.