சேலம் அருகே வாலிபரை தாக்கிய கார் உரிமையாளர் கைது
கொண்டலாம்பட்டி:
சேலம் சின்ன கொல்லப்பட்டி, தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் இளைய ராஜா(37). இவர் நேற்று முன்தினம் கொண்டப்ப நாயக்கன்பட்டி வார சந்தைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அவர் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சந்தைக்கு சென்று மீண்டும் வந்து பார்த்த போது அவரின் வாகனத்தை எடுக்க முடியாதபடி அருகில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் கார் உரிமையாளர் வரும் வரை வெகு நேரம் காத்திருந்தார். பின்பு கார் உரிமையாளரிடம் ஏன் இப்படி எனது வாகனத்தை எடுக்க முடியாதபடி உங்கள் காரை நிறுத்தினீர்கள் என்று வாக்குவாத்தில் ஈடுபட்டார். பின்பு இது கைகலப்பாக மாறியது.
இளையராஜாவை கார் உரிமையாளர் மற்றும் அவருடன் வந்திருந்த பார்த்திபன் ஆகியோர் கடுமையாக தாக்கினர். இது குறித்து இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் கொண்டப்ப நாயக்கன்பட்டி, முயல்நகர் பகுதியை சேர்ந்த கார் உரிமையாளரான சரவணன்(28) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் சரவணனின் மனைவி, தகராறு நடக்கும் போது நான் தடுக்க சென்றேன். அப்போது இளையராஜா தன்னை தாக்கியதாக அவர் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் இளையராஜாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.