செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Published On 2018-09-02 11:53 GMT   |   Update On 2018-09-02 11:53 GMT
நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 19 ஆயிரத்து 800 கன அடியில் இருந்து 20 ஆயிரத்து 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்:

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் கூடுதல் தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் கடந்த 4 நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

நேற்று முன்தினம் 15 ஆயிரத்து 525 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 21 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று காலை இதே அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 19 ஆயிரத்து 800 கன அடியில் இருந்து 20 ஆயிரத்து 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120.19 அடியாக உள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அங்குள்ள அருவிகளில் தண்ணீர் அதிகளவு கொட்டுகிறது.

இதையடுத்து அருவிகளில் குளிக்க இன்று 56-வது நாளாக தடை நீடித்து வருகிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். ஆனால் அவர்கள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை ஒகேனக்கல் பிலிகுண்டுலுவில் பொதுப் பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
Tags:    

Similar News