செய்திகள்

தரமற்ற மருத்துவ பொருட்கள் கொள்முதலா?- அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்

Published On 2018-09-01 07:36 GMT   |   Update On 2018-09-01 07:36 GMT
தரமில்லா மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படுகிறதா? என்ற கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார். #TNMinister #Vijayabaskar
திருச்சி:

திருச்சி விமான நிலையத்தில் இன்று தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக வருகிற செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. தமிழக அரசு மருத்துவர்களுடன் இணக்கமான உறவை பின்பற்றி வருகிறது.

மருத்துவர்கள் 24 மணி நேரமும் சமூக அக்கறையுடன் பணியாற்றுகின்றனர். அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றும். தொகுப்பூதிய தொழிலாளர்களுக்கு ஊதியம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை பயிற்சி மருத்துவர்களுக்கும் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.


108 சேவையை பொறுத்த வரை தமிழகத்தில் மொத்தம் 930 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. 10 நிமிடத்திற்கு குறைவாக ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்க வேண்டும் என்பது தான் இலக்கு. ஆனால் இந்த ஆண்டில் 8.3 நிமிடத்தில் ஆம்புலன் சேவை வழங்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்தில் ஆயிரம் எண்ணிக்கையிலான ஆம்புலன்ஸ்களை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்ற பயன்படுத்தும் கருவி, சேதமடைந்து அவர்களின் உடலுக்குள் புகுந்து அறுவை சிகிச்சையில் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தரமில்லா மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படுகிறதோ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும். தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது தற்போதைக்கு தடுக்க முடியாதது. தமிழகத்தில் இது போன்ற நடவடிக்கைக்கு சாத்தியமில்லை.

இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Vijayabaskar
Tags:    

Similar News