செய்திகள்

காவிரி டெல்டா பாசனம் - மேட்டூர் அணை நீர்திறப்பு 6 ஆயிரம் கனஅடியாக குறைப்பு

Published On 2018-08-30 16:05 GMT   |   Update On 2018-08-30 16:05 GMT
காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 6 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
மேட்டூர்:

கேரள மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 1 மாதத்திற்கு மேலாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து 2லட்சம் கனஅடிக்கு மேல் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதன் காரணமாக மேட்டூர் அணை இந்த ஆண்டு 3-வது முறையாக நிரம்பியது. மேட்டூர் அணையிலிருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

நேற்று அணைக்கு 13ஆயிரத்து 901 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை இது குறைந்து 8ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 119.88 அடியாக உள்ளது. அணையில் இருந்து நேற்று காலை 17ஆயிரத்து 825 கனஅடி தண்ணீர் காவிரி டெல்டா பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது.

தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நேற்று பிற்பகல் 6ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்திற்கு 800கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
Tags:    

Similar News