செய்திகள்

நகை பாலீஸ் போடுவதாக கூறி மூதாட்டியிடம் 8 பவுன் நகை அபேஸ்

Published On 2018-08-28 16:58 GMT   |   Update On 2018-08-28 16:58 GMT
ஓசூரில் நகையை பாலீஸ் போட்டு கொடுப்பதாக கூறி மூதாட்டியிடம் வடமாநில வாலிபர்கள் 2 பேர் 8 பவுன் நகையை அபேஸ் செய்து சென்று விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓசூர்:

ஓசூர் கே.சி.சி. நகரை சேர்ந்தவர் சண்முகத்தாய் (வயது 64). இவர் நேற்று மாலை வீட்டு முன்பு அமர்ந்து இருந்தார். அப்போது அந்த வழியாக வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் மூதாட்டியிடம் பித்தளை பொருட்களுக்கு பாலீஸ் போட்டு கொடுப்பதாக கூறி உள்ளனர். இதையடுத்து மூதாட்டி வீட்டில் இருந்த குங்கும சிமிழ் ஒன்றை எடுத்து வந்து அந்த வாலிபர்களிடம் கொடுத்துள்ளார். அதற்கு அந்த வாலிபர்கள் பாலீஸ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதையடுத்து அந்த வாலிபர்கள் மூதாட்டியிடம் நகை இருந்தால் கொண்டு வருமாறும், அதற்கும் பாலீஸ் போட்டு கொடுப்பதாக கூறி உள்ளனர். இதனால் மூதாட்டி வீட்டுக்குள் சென்று 8 பவுன் நகையை கொண்டு வந்து அந்த நபர்களிடம் கொடுத்துள்ளார். அதனை ஒரு குக்கரில் போட்டு சுத்தம் செய்வது போல் நடித்துள்ளனர். பின்னர் அந்த நபர்கள் குக்கரில் நகை உள்ளது. சிறிது நேரம் கழித்து எடுத்து கொள்ளுமாறு கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

பின்னர் மூதாட்டி சண்முக தாய் குக்கரை திறந்து பார்த்த போது அதில் நகையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அப்போது அந்த வாலிபர்கள் 8 பவுன் நகையை அபேஸ் செய்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மூதாட்டி குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் அந்த நபர்களை பல்வேறு இடங்களிலும் தேடியும் எங்கும் காணவில்லை.

இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். மூதாட்டியிடம் 8 பவுன் நகை அபேஸ் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
Tags:    

Similar News