செய்திகள்

பீளமேட்டில் தொழிலாளியை கொன்றது ஏன்? கைதான 5 பேர் வாக்குமூலம்

Published On 2018-08-24 10:03 GMT   |   Update On 2018-08-24 10:03 GMT
பீளமேட்டில் தொழிலாளியை கொன்றது ஏன் என்பது குறித்து கைதான 5 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பீளமேடு:

சிங்காநல்லூர் எஸ்.ஐ. எச்.எஸ். காலனியை சேர்ந்தவர் பாபு(வயது 45). வெல்டிங் தொழிலாளி.

இவர் நேற்றுமுன்தினம் இரவு பீளமேடு விமான நிலையத்தின் பின்புறம் நடந்து சென்ற போது 5 பேர் இவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்தனர்.திடீரென கும்பல் கத்தியால் பாபுவை குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். பீளமேடு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில் சவுரிபாளையத்தை சேர்ந்த பூசாரி மணி(20), நீலிகோணம்பாளையத்தை சேர்ந்த மோகன்பாபு(23), நவீன்குமார்(21), சசி மோகன் (25), ஆனந்த்ராஜ்(24) ஆகிய 5 பேர் சிக்கினர்.

இவர்களில் பூசாரி மோகன் மீது ஏற்கனவே ஒரு கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் என பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. இவர் கடைசியாக ஜனவரி மாதம் வழக்கு ஒன்றில் கைதாகி உள்ளார்.

பிறகு ஜாமீனில் வெளி வந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு இவரும், மற்ற 4 பேரும் மோட்டார் சைக்கிள்களில் நீலிகோணம்பாளையம் பகுதியில் சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த பாபுவிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் தர மறுத்ததால் கத்தியால் குத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கைதான 5 பேர் மீதும் கொலை, வழிப்பறி உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதான 5 பேரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுகின்றனர்.

பாபுவை குத்திய பிறகு இதே கும்பல் மோட்டார் சைக்கிளில் ஹட்கோ காலனி சென்றுள்ளனர். அங்கு மிதுன் என்பவரிடம் பணம் கேட்டு தகராறு செய்தனர். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி தாக்கினர்.

மிதுன் சத்தம்போடவே அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டதால் பூசாரி மணி உள்பட 5 பேரும் தப்பி ஓடிச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக பூசாரி மணி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. #tamilnews
Tags:    

Similar News