செய்திகள்

சேலம் நகைக்கடை அதிபரிடம் ரூ. 7½ கோடி மோசடி - தந்தை, மகன் மீது வழக்கு

Published On 2018-08-23 09:17 GMT   |   Update On 2018-08-23 09:17 GMT
சேலத்தில் தங்கம், வெள்ளி வாங்கி தருவதாக கூறி நகைக்கடை அதிபரிடம் ரூ. 7½ கோடி மோசடி செய்த தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கொண்டலாம்பட்டி:

சேலம், செவ்வாய்ப்பேட்டை சாய்பாபா தெருவை சேர்ந்தவர் துளசிராம். இவரது மகன் லட்சுமிகாந்த் (வயது 26). இவர் மொத்தமாக வெள்ளி, தங்கத்தை வாங்கி ஆபரணமாக செய்து, விற்பனை செய்து வருகிறார்.

இவர் சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கரிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நான், பேர்லேண்ட்ஸ் ஏ.ஏ.தெருவில் உள்ள என்.எஸ். வில்லியன் பெயரில் நகைக்கடை நடத்தி வரும் அம்ஜித் சிங்கவி மற்றும் அவரது தந்தை மகேந்திரசந்த் சிங்கவி ஆகியோரிடம் இருந்து மொத்தமாக வெள்ளி, தங்கம் வாங்கி தொழில் செய்து வந்தேன். கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந்தேதி முதல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1-ந்தேதி வரை தங்கம், வெள்ளி மொத்தமாக கொள்முதல் செய்வதற்காக வங்கி மூலம் ரூ.7 கோடியே 58 லட்சத்து 36 ஆயிரத்து 750 அவர்களிடம் செலுத்தினேன்.

இதனை தொடர்ந்து அவர்கள் தங்கம், வெள்ளி ஆகியவை கொடுக்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.

இது குறித்து விசாரணை நடத்த சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு போலீஸ் கமி‌ஷனர் சங்கர் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் அம்ஜித் சிங்கவி மற்றும் அவரது தந்தை மகேந்திரசந்த் ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் மரியமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News