திருவெறும்பூர் பகுதியில் மளிகை கடை - பேன்சி ஸ்டோரில் கொள்ளை
திருவெறும்பூர்:
திருவெறும்பூர் பகவதி புரத்தை சேர்ந்தவர் ஆயிஷா (வயது 70). இவர் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்லும் முன்பு தனது சகோதரி மும்தாஜிடம் கடையின் பொறுப்பை விட்டுச்சென்றார்.
இதையடுத்து மும்தாஜ் இரவில் கடையை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கடையில் இருந்த ரூ.5 ஆயிரம் பணம், ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட்டுகள் திருடு போயிருந்தது.
இதேபோல் திருவெறும்பூர் வேங்கூர் சாலையில் புவனேஸ்வரி என்பவர் பேன்ஸி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கடைக்குள் இருந்த ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிச்சென்று விட்டனர்.
இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.