செய்திகள்

தஞ்சையில் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது

Published On 2018-08-19 11:06 GMT   |   Update On 2018-08-19 11:06 GMT
தஞ்சையில் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை வடக்கு வாசல் பொன்றி பாளையம் பகுதியை சேர்ந்த கருப்பையன் மகன் விஜய் என்ற விஜயன். இவர் மீது தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் 4 கொலை வழக்குகள் உள்பட 9 வழக்குகள் உள்ளன.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த கொலைகளில் விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் கடந்து சில நாட்களுக்கு முன்பு தம்பி மண்டையா என்ற பாஸ்கர் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த வழக்கில் விஜயனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து விஜயனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரை சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் வைத்திருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ஜெயிலில் இருந்து வெளியில் வந்தார்.

பின்னர் அமைதியாக இருந்த அவர் மீண்டும் வழிப்பறியில் ஈடுபட்டார். நேற்று முன்தினம் வடக்குவீதி பகுதியில் ஒருவரை அரிவாளை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து பணம், செல்போன்களை விஜயன் பறித்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து மேற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ கோபால், சப்- இன்ஸ்பெக்டர் சுகுமார் உள்பட போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயனை தேடினர்.

அப்போது அவர் வடக்கு வாசல் பகுதியில் சுற்றி திரிவது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசிடம் இருந்து விஜயன் தப்பி ஓடினார்.

இதையடுத்து போலீசிடம் இருந்து தப்பிப்பதற்காக வடக்கு வாசல் அருகே உள்ள ஒரு கோவில் சுவற்றில் இருந்து விஜயன் கீழே குதித்தார். அப்போது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. உடனே போலீசார் அங்கு சென்று விஜயனை கைது செய்தனர்.

மேலும் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரை சேர்த்தனர்.

Tags:    

Similar News