செய்திகள்
தேனி அருகே பார் ஊழியரை தாக்கி மிரட்டிய கும்பல் கைது
தேனி அருகே பார் ஊழியரை தாக்கி மிரட்டிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தேனி:
தேனி அருகில் உள்ள பழனி செட்டிபட்டி அண்ணாநகர் முதல் தெருவை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது45). இவர் பூதிப்புரம் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் பார் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று மது குடிக்க வந்த 3 பேர்களிடம் பணம் கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் ரத்தினவேலுவை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயம் அடைந்த அவர் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் ரத்தினவேல் புகார் அளித்தார். அதன்பேரில் உத்தமபாளையம் சூரியநாராயணபுரத்தை சேர்ந்த மோகன் (27), உப்புக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த அர்ஜூன் (28), தேனி-கம்பம் ரோடு ஆற்றங்கரை தெருவை சேர்ந்த மனோஜ்குமார் (27) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.