குடும்ப தகராறில் 9 மாத குழந்தையின் தாய் தூக்குபோட்டு தற்கொலை
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே சாத்தங்குடி பகுதியை சேர்ந்தவர் திவாகர் (வயது30). விவசாயி. இவரது மனைவி தேன்மொழி(26). திருமணமாகி 1½ வருடங்கள் ஆகிறது. 9 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் திவாகர் தினமும் வீட்டிற்கு தாமதமாக வருவாராம். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதேபோல் நேற்று இரவும் கணவர் தாமதமாக வந்ததால் இதுகுறித்து தேன்மொழி கேட்டதால் தகராறு ஏற்பட்டதாம். பின்னர் திவாகர் தூங்கி விட்டாராம்.
நள்ளிரவில் சத்தம் கேட்டு திவாகர் எழுந்து சென்று பார்த்தபோது பக்கத்து அறையில் தேன்மொழி தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றதை கண்டு திடுக்கிட்டார். உடனே திவாகர், மனைவியை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தேன்மொழி இறந்தார்.
இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேன்மொழிக்கு திருமணமாகி 1½ வருடங்களே ஆவதால் வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என கும்பகோணம் சப்-கலெக்டர் பிரதீப்குமார் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.