செய்திகள்

ஓசூர் அருகே லாரி - மோட்டார்சைக்கிள் மோதி விபத்து: 2 பேர் பலி

Published On 2018-08-12 16:04 GMT   |   Update On 2018-08-12 16:04 GMT
ஓசூர் அருகே லாரி-மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள். #Accident
மத்திகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தொட்டமஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் மாதேவா (வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர் பசவராஜ் (28). இருவரும் தொழிலாளர்கள். மாதேவாவும், பசவராஜூம் நேற்று முன்தினம் இரவு ஆனேக்கல் நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார்சைக்கிளை மாதேவா ஓட்டிச் சென்றார். பசவராஜ் பின்னால் அமர்ந்து இருந்தார். ஓசூர் அருகே மத்திகிரியை அடுத்த நஞ்சாபுரம் அருகில் மோட்டார்சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியும், மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த மாதேவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பசவராஜ் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பசவராஜ் இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மத்திகிரி போலீசார் அங்கு சென்று மாதேவா, பசவராஜ் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News