செய்திகள்

மத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவி பலி

Published On 2018-08-10 07:50 GMT   |   Update On 2018-08-10 07:50 GMT
மத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை அடுத்த செட்டியப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் மத்தூரில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஷாகிரா. இவர்களுக்கு முதல் மகள் ரோகி (வயது 19) ஊத்தங்கரை தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். 2-வது மகள் ரேஷ்மா (16), 3-வது மகள் மும்தாஜ் (14), மகன் அப்பாஸ் (11) ஆகியோர் உள்ளனர்.

நேற்று மாலை ரோகிக்கு வீட்டில் பிறந்தநாள் கொண்டாடினர். பின்னர் வீட்டின் அருகே உள்ள அவரது விவசாய கிணற்றில் உள்ள மீன்களுக்கு பொறி போடுவதற்காக சென்றார். அப்போது அவர் கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். வெகுநேரமாகியும் ரோகி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் கிணற்றின் அருகே சென்று பார்த்தனர். அப்போது கிணற்றில் ரோகியின் காலணி மட்டும் மிதந்தது.

இதுகுறித்து மத்தூர் போலீசாருக்கும், போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி ரோகியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கிணற்றில் மூழ்கி இறந்த ரோகியின் பிணத்தை மீட்டனர். போலீசார் உடலை கைப்பற்றி மத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Tags:    

Similar News