செய்திகள்

வையம்பட்டி அருகே மொபட் மீது வேன் மோதியதில் தாய், மகன் பலி

Published On 2018-08-09 17:55 GMT   |   Update On 2018-08-09 17:55 GMT
வையம்பட்டி அருகே மொபட் மீது சரக்கு வேன் மோதியதில் தாய்,, மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வையம்பட்டி:

திருச்சி மாவட்டம் வையம்பட்டியை அடுத்த முகவனூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ்(வயது 38). விவசாயியான இவர் நேற்று முன்தினம் காலை தனது தாய் வள்ளியம்மாளை (60)அழைத்துக் கொண்டு வையம்பட்டியில் இருந்து முகவனூர் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

வையம்பட்டி - கரூர் சாலையில் வையம்பட்டியை அருகே உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க் அருகில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த சரக்கு வேன் மொபட் மீது மோதியது.

இதில் மொபட்டில் சென்ற தாய், மகன் இருவரும் படுகாயமடைந்தனர். பின்னர் படுகாயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட காளிதாஸ் மற்றும் அவரது தாய் வள்ளியம்மாள் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதையடுத்து இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
Tags:    

Similar News