செய்திகள்

ஆரணியில் வாலிபர் தற்கொலை - டாக்டர்கள் இல்லாததால் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் ரகளை

Published On 2018-08-07 07:21 GMT   |   Update On 2018-08-07 07:21 GMT
ஆரணியில் தற்கொலை செய்து கொண்ட வாலிபர் உடலை பரிசோதிக்க அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லாததால் உறவினர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
ஆரணி:

ஆரணி நேத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் பாலாஜி (27). திருமணமாகாத இவர், ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்தார். நேற்று, அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் 2 பேருடன் ஒரே பைக்கில் சென்றார். அப்போது பைக் விபத்தில் சிக்கியது.

இதில் நண்பர்கள் 2 பேரும் படுகாயமடைந்தனர். சிகிச்சைக்காக, வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் பாலாஜிக்கு காயம் ஏற்படவில்லை. ஆனாலும் நண்பர்கள் காயமடைந்ததால் விபத்துக்கு பாலாஜி தான் காரணம் என்று உறவினர்கள் கடுமையாக திட்டினர்.

இதனால் மனமுடைந்த பாலாஜி இன்று அதிகாலை தனது நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர், உறவினர்கள் அவரை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பணிநேர டாக்டர் இல்லை.

நர்ஸ் மற்றும் மருத்துவ உதவியாளரான பாண்டியன் ஆகியோர் பாலாஜி உடலை பரிசோதித்தனர். அதில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். உறவினர்களில் ஒரு வாலிபர் மருத்துவப்படிப்பு படித்தவர். அவர், நாடியை பிடித்து பார்த்து நாடிதுடிப்பு உள்ளது. உடனடியாக டாக்டரை வர சொல்லுங்கள் என்றார்.

டாக்டர் இல்லை என நர்ஸ் மற்றும் உதவியாளர் கூறியதால் உறவினர்கள் ஆத்திரமடைந்து ஆஸ்பத்திரியில் ரகளையில் ஈடுபட்டனர். மேலும், நர்ஸ் மற்றும் உதவியாளரை தாக்க முயன்றனர். இதுப்பற்றி, ஆஸ்பத்திரி தரப்பில் ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதற்குள், வாலிபரின் உடலை வேறு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் தூக்கி சென்றனர். அங்கு வாலிபர் இறந்துவிட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து, போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News