செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே காட்டுப்பகுதியில் 2 பேர் வெட்டிக் கொலை

Published On 2018-08-07 06:29 GMT   |   Update On 2018-08-07 06:29 GMT
ஒரே இடத்தில் 2 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Murdercase

திருவள்ளூர்:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள செங்கரை கிராமத்தில் காட்டுப்பகுதி உள்ளது. இங்குள்ள செல்லி அம்மன் கோவில் அருகே இன்று காலை 2 வாலிபர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். கத்தியாலும் உடலில் குத்தப்பட்டு இருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஊத்துக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கொலையுண்ட 2 பேருக்கும் சுமார் 35 வயது இருக்கும். அவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்று உடனடியாக தெரிய வில்லை. அவர்கள் பேண்ட், சட்டை அணிந்திருந்தார்கள்.

அவர்கள் அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். நண்பர்களுடன் மது அருந்த வந்த போது ஏற்பட்ட மோதலில் தீர்த்துக்கட்டப்பட்டார்களா? அல்லது பெண் தகராறில் கொலை நடந்ததா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சிலரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. கொலையுண்டவர்கள் ரவுடிகள் என்றும் கூறப்படுகிறது. அவர்களை பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

ஒரே இடத்தில் 2 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

Tags:    

Similar News