செய்திகள்

புதுவையில் கார்களில் திருடிய திருச்சி கொள்ளை கும்பலை சேர்ந்த மேலும் 2 பேர் கைது

Published On 2018-08-06 11:22 GMT   |   Update On 2018-08-06 11:22 GMT
புதுவையில் கார்களில் திருடிய திருச்சி கொள்ளை கும்பலை சேர்ந்த மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrestcase

புதுச்சேரி:

புதுவையில் சுற்றுலா பயணிகளின் கார்களில் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இருக்கும் பொருட்களை திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன.

இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி தனியார் நிறுவன அதிகாரி ஒருவர் அரசு ஆஸ்பத்திரி அருகே காரை நிறுத்தி இருந்தார்.

அப்போது அவரது கார் கண்ணாடியை உடைத்து திருட முயன்ற வாலிபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். திருச்சி ராம்ஜி நகரில் இந்தியா முழுவதும் சென்று கொள்ளையடிக்கும் கும்பல் உள்ளது.

அந்த கும்பலை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரது பெயர் பிரசாந்த் (வயது 26). அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, மேலும் 4 பேர் திருட வந்ததாக கூறினார்.

இதையடுத்து அவர்களை பிடிப்பதற்கு பெரியகடை சப்-இன்ஸ்பெக்டர் முருகன், அதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் திருச்சி சென்றனர்.

அங்கு கிரிநாதன், அசார் அலி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் சண்முகம், சசி, வினோத் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

இதில், சண்முகம் கொள்ளையர்களின் பொருட்களை விற்று கொடுக்கும் பணிகளை செய்து வந்தார்.

கைதானவர்களிடம் இருந்து 2 லேப்-டாப், ரூ. 25 ஆயிரம் ரொக்கம், 3 செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News