இருக்கன்குடியில் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதாக இளம்பெண் குற்றச்சாட்டு
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி போலீஸ் சரகத்திற்குட்பட்ட பி.லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த முத்துபெருமாள் மனைவி முத்துரதி (வயது 38). கணவரை பிரிந்த இவர் 2 குழந்தைகளுடன் சகோதரி முத்து பாப்பா வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்ற முத்துரதி இருக்கன்குடி போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் விஜயன் தாக்கியதாக புகார் தெரிவித்தார்.
எனது சகோதரி முத்துபாப்பாவுக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த லட்சுமி என்பவருக்கும் இடத்தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் நான் இருக்கன்குடி போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றேன். சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் விசாரணை நடத்தினார்.
எனக்கும், அந்த இடப் பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை என கூறினேன். இதை கேட்க மறுத்து அவர் என்னை தாக்கி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
இதற்கிடையே சாத்தூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்துரதி மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பெண்ணை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் முத்துக்குமார் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.