செய்திகள்
கோப்புப்படம்

ப.சிதம்பரம் குடும்பத்தினர் 20-ந்தேதி ஆஜராக வேண்டும்- எழும்பூர் கோர்ட்டு உத்தரவு

Published On 2018-07-30 08:10 GMT   |   Update On 2018-07-30 08:10 GMT
வெளிநாட்டில் வாங்கிய சொத்துகளை மறைத்ததாக வருமானவரித்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் ஆக. 20ந்தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #PChidambaram #EgmoreCourt
சென்னை:

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் சொத்துக்களை வாங்கியுள்ளனர்.

அதாவது இங்கிலாந்து நாட்டில் ரூ.5.37 கோடிக்கும், அமெரிக்காவில் ரூ.3.28 கோடிக்கும் சொத்து வாங்கியுள்ளனர். இந்த விவரங்களை அவர்கள் தங்களது வருமான வரி கணக்கில் காட்டவில்லை.

இதையடுத்து கருப்புப் பணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 23-ந்தேதி இந்த வழக்கு விசாரணையின் போது, நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணையை 30-ந்தேதிக்கு (இன்று) தள்ளிவைத்த நீதிபதி மலர்விழி, அன்று கண்டிப்பாக 3 பேரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கோப்புப்படம்

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி மலர்விழி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி வெளிநாடு சென்றுள்ளதாலும், நளினி சிதம்பரம் ஐகோர்ட்டில் முக்கியமான வழக்கு விசாரணைக்கு ஆஜராக உள்ளதாகவும், ஸ்ரீநிதி ஆஸ்பத்திரி சென்றுள்ளதாகவும், அவர்களது, வக்கீல் மனு தாக்கல் செய்து, 3 பேரும் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு வருமான வரித்துறை வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

கடந்த முறை அவர்களை நேரில் ஆஜராக வேண்டும் என்று இந்த கோர்ட்டு உத்தரவிட்டும், அதை மீறி செயல்படுகின்றனர் என்று கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, விசாரணையை ஆகஸ்டு 20-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். அன்று தவறாமல், கண்டிப்பாக 3 பேரும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  #PChidambaram #EgmoreCourt
Tags:    

Similar News