வடமதுரை பகுதியில் பான் கார்டு வாங்கி தருவதாக மோசடி செய்யும் கும்பல்
வடமதுரை:
தனி நபர் வருமானங்களை கணக்கெடுப்பதற்காக பான்கார்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அனைத்து வங்கிகளிலும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்தாலோ செலுத்தினாலோ பான் கார்டு அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வடமதுரை, அய்யலூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் பெரும்பாலானோர் விவசாயிகளே. இவர்கள் வங்கி கடன், உதவித் தொகை உள்ளிட்டவைகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை நாடி வருகின்றனர். இதற்கு பான்கார்டு தேவைப்படுவதால் அதனை எடுக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பான் கார்டு பெறுவதற்கு அரசு சார்பில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சில தனியார் நிறுவனங்களும் பான் கார்டு பெற விண்ணப்பிக்க பொது மக்களிடம் ஆவணங்களை பெற்று வருகின்றனர். தற்போது வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதிகளில் சிறப்பு முகாம் என கூறி கும்பல்கள் வருகின்றனர். அவர்கள் பொதுமக்களிடம் குறிப்பிட்ட தொகை மற்றும் ஆவணங்களை பெற்றுக் கொண்டு பான் கார்டு தபாலில் வரும் என கூறிச் செல்கின்றனர்.
பொதுவாக அதிகபட்சமாக 90 நாட்களுக்குள் பான்கார்டு அனுப்பப்பட்டு விடும். ஆனால் இந்த மோசடி கும்பலிடம் விண்ணப்பித்து நீண்ட நாட்களாகியும் இப்பகுதி மக்களுக்கு பான் கார்டுகள் வரவில்லை. இதனால் ஏமாற்றமடைந்துள்ளனர். ஒரு சில நிறுவன ஊழியர்களை தொடர்பு கொண்டு கேட்டால் சரியான பதில் தருவதில்லை. எனவே அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். #pancard