செய்திகள்
நிலக்கோட்டை வைகை ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க போலீஸ் சோதனை சாவடி
நிலக்கோட்டை வைகை ஆற்றில் திருட்டு தனமாக மணல் அள்ளுவதை தடுப்பதற்காக போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
கொடைரோடு:
நிலக்கோட்டை அருகேயுள்ள அணைப்பட்டி வைகை ஆற்று பகுதியில் அனுமதியின்றி மணல்களை லாரி, டிராக்டர்கள் மூலம் ஏற்றி இரவு நேரத்தில் திருடி விற்பனைக்கு அனுப்பி வருவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நீண்ட நாட்களாக தொடர்ந்து வைகை ஆற்றில் மணல் அள்ளி வருவதை தடுக்கவும் குடிநீர் ஆதாரமாக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என பொதுமக்கள் பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர். நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை அடிக்கடி முற்றுகை போராட்டம் நடத்தினர்.
நிலக்கோட்டை வைகை ஆற்றில் மணல் கடத்தப்பட்டு வருவதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் போலீஸ் டி.ஐ.ஜி ஜோஷி நிர்மல்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆகியோர் அனைப்பட்டி ஆற்று பகுதியில் நேரில் ஆய்வு செய்தனர்.
அதன் பின்னர் போலீஸ் சோதனை சாவடி அமைக்க உத்தரவிட்டனர்.
அதன்படி அணைப்பட்டி - குருவித்துரை செல்லும் சாலையிலும், வைகை ஆற்று பாலத்தில் அணைப்பட்டியிலும், சித்தர்கள் நத்தம் ஆகிய இடங்களில் போலீஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த போலீஸ் சோதனை சாவடியில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 5-க்குமேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் மணல் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.