செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே தாயை கொன்ற மகன் பரபரப்பு வாக்குமூலம்

Published On 2018-07-25 08:12 GMT   |   Update On 2018-07-25 08:12 GMT
கிருஷ்ணகிரி அருகே சொத்து தராததால் தாயை கொன்றதாக மகன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த சிகரலப்பள்ளி அருகில் உள்ள பார்டர் காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி லீலாவதி(72). இவரது மகன் சுரேந்திரன்(45). இவர்களுக்கு அதே பகுதியில் நிலம் உள்ளது.

இந்த நிலம் சம்பந்தமாக தாய்க்கும், மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நிலம் சம்பந்தமான தீர்ப்பு வந்தது. இதில் லீலாவதிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த நிலத்தை அளப்பதற்காக வருவாய்த்துறையினர் நேற்று செல்வதாக இருந்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் நிலம் அருகில் தாய் லீலாவதி, மகன் சுரேந்திரன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த சுரேந்திரன், அரிவாளால் தனது தாய் லீலாவதியின் கழுத்தில் வெட்டினார். இதில் லீலாவதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். தாயை கொலை செய்த சுரேந்திரன் பர்கூர் போலீசில் சரண் அடைந்தார். இதனையடுத்து பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, லீலாவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தாயை கொலை செய்த மகன் சுரேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தினர். சொத்து தராததால் அவரை கொன்றதாக மகன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இன்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

Tags:    

Similar News