மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலி திருட முயன்ற 2 பெண்கள் கைது
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே உள்ள கோனேகவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தம்மாள்(70). இவர் நேற்று வேப்பனப்பள்ளிக்கு சென்றுள்ளார். அங்குள்ள ராமன் என்பவரது மளிகை கடை முன்பு அமர்ந்திருந்த அவரிடம் இரண்டு பெண்கள் வந்து பேச்சு கொடுத்துள்ளனர். அத்துடன் அவர்கள் வைத்திருந்த தின்பண்டங்களையும் கொடுத்து சாப்பிடுமாறு கூறியுள்ளனர். அப்போது மூதாட்டி கோவிந்தம்மாள் அணிந்திருந்த ரூ. 64 ஆயிரம் மதிப்பிலான தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்ப முயன்றுள்ளனர்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கோவிந்தம்மாள் கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அந்த இரண்டு பெண்களையும் கையும், களவுமாக பிடித்து வேப்பனப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் வழக்குபதிவு செய்து, அந்த பெண்களிடம் இருந்த நகையை பறிமுதல் செய்ததுடன்,. விசாரணையில் வேப்பனஹள்ளி அருகே உள்ள சின்னகொத்தூர் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் மனைவி சாந்தம்மாள்(35), நாச்சிக்குப்பம் வெங்கடேஷ் மனைவி நாகரத்தினம்மா(36) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.